கரூர் நெரிசலில் பலியான 41 பேரின் குடும்பங்களுக்கு தற்காலிக வேலை வழங்க உயர்நீதிமன்றம் அனுமதி!
கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி நடந்த தவெக (TVK) பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 32 பேருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுநல வழக்கு தொடரப்பட்டது. நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த தீரன் திருமுருகன் மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில நிர்வாகி சீனி அகமது ஆகியோர் இந்த மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தன.
விசாரணையின் போது மனுதாரர்கள் தரப்பில், கரூர் நெரிசலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலைகள் வழங்கப்படுவதாகவும், ஆனால் இதேபோன்ற துயரச் சம்பவங்களான கும்பகோணம் மகாமகம், ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு, தருமபுரி பேருந்து எரிப்பு உள்ளிட்ட நிகழ்வுகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படவில்லை என்றும், இதுபோன்ற சம்பவங்களுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்குவது விதிகளுக்கு முரணானது என்றும் வாதிடப்பட்டது. அரசுத் தரப்பில், தூத்துக்குடி (ஸ்டெர்லைட்) துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட விரும்பவில்லை என்றும், அரசுப் பணி நியமனங்கள் வழங்கும் நிகழ்ச்சியை நடத்தலாம் என்றும் தெரிவித்தனர். ஆனால், இந்த வழக்கில் நீதிமன்றம் இறுதி முடிவு எடுக்கும் வரை, அவர்களுக்கு தற்காலிகப் பணியாகவே வழங்க வேண்டும் எனத் தெரிவித்து, அடுத்தகட்ட விசாரணையை 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும், இந்த வழக்கில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தையும் (TNPSC) சேர்க்க உத்தரவு பிறப்பித்தனர்.
Tags: #கரூர்_நெரிசல் #சென்னை_உயர்நீதிமன்றம் #தவெக #MaduraiBench #KarurStampede #TVK #TNPSC #TamilNaduNews #HighCourtOrder
