வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடாது என்றும், நிச்சயம் கூட்டணி அமைத்தே தேர்தலைச் சந்திக்கும் என்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் இன்று நடைபெற்ற கட்சி நிகழ்வொன்றில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும், தமிழ்நாட்டில் மூன்றாவது அணி அமைப்பது குறித்து இப்போதைக்கு கருத்து தெரிவிக்க முடியாது என்றும், கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் கட்சி நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடன் கலந்து பேசியே இறுதி செய்யப்படும் என்றும் அவர் கூறினார். தலைமைப் பொறுப்பில் இருக்கும் தான் நிச்சயமாக வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன் என்பதையும் பிரேமலதா விஜயகாந்த் உறுதிப்படுத்தினார்.

தமிழகத்தில் அடுத்த சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனைப் போட்டி நிலவும் சூழல் உருவாகியுள்ளது. திமுகவும், அதிமுகவும் பெரும்பாலும் தங்களது கூட்டணிகளை உறுதிப்படுத்தியுள்ளன. நாம் தமிழர் கட்சி வழக்கம் போல் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அதிகாரத்தில் பங்கு எனக் கூறி வரும் நிலையில், இதுவரை எந்தக் கட்சியும் அவர்களுடன் கூட்டணிக்கு வரவில்லை.

இந்தச் சூழலில், கடந்த ஜனவரி மாதமே நடைபெற்ற மாநில மாநாட்டில் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தார். இருப்பினும், மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படவில்லை. மாநாடு முடிந்து 20 நாட்களுக்கு மேலாகியும், தேமுதிக எந்தக் கூட்டணியில் இடம்பெறும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. தேமுதிக, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுடனும் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கவும் வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.