தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபித்துள்ளார். புதன்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் அரசு தெளிவான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.

நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்தை இன்று காலை சட்டப்பேரவையில் விஜய் முன்மொழிந்தார். இதன் மீதான விவாதத்திற்குப் பிறகு சபாநாயகர் வாக்கெடுப்பு நடத்தினார். இந்த வாக்கெடுப்பு மிகவும் சுவாரஸ்யமாக அமைந்தது. வழக்கமான வாக்கெடுப்பு முறை போல் இல்லாமல், ஒவ்வொரு உறுப்பினரின் பெயரையும் தனித்தனியாக அழைத்து எம்.எல்.ஏ.க்களின் சம்மதத்தை சபாநாயகர் பதிவு செய்து கொண்டார்.

இதில் விஜய் அரசுக்கு ஆதரவாக 144 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். 22 உறுப்பினர்கள் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பின் போது சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தவெக அரசுக்கு காங்கிரஸ், விசிக மற்றும் ஐயுஎம்எல் ஆகிய கட்சிகள் ஆதரவளித்தன. அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களும் முதலமைச்சருக்கு ஆதரவாகவே வாக்களித்தனர்.

அதிமுக vs அதிமுக

முன்னதாக தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது சட்டப்பேரவையில் சற்று சலசலப்பு ஏற்பட்டது. அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி பேசுகையில், விஜய் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தங்களது எம்.எல்.ஏ.க்களுக்கு அவர் பணம் பேரம் பேசியதாக குற்றம் சாட்டினார். வாக்கெடுப்புக்கு முன்பு தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை முதலமைச்சர் சந்திப்பது முறையல்ல என்று அவர் குறிப்பிட்டார்.

அதிமுக ஒற்றுமையாகவே உள்ளது என்றும், தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் விஜய்க்கு எதிராகவே வாக்களிப்பார்கள் என்றும் பழனிசாமி தெரிவித்தார். ஆனால், பழனிசாமியின் இந்தக் கருத்துக்களை அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கடுமையாகக் கண்டனம் தெரிவித்தனர். தாங்கள் அனைவரும் விஜய்க்கே ஆதரவளிப்போம் என்று அதிருப்தி குழுத் தலைவர் வேலுமணி சட்டப்பேரவையில் தெளிவுபடுத்தினார்.