தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகளில் 108 இடங்களை வென்று விஜய்யின் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. செவ்வாய்க்கிழமை அன்று சென்னையில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தனது கட்சி எம்.எல்.ஏ-க்களுடன் விஜய் ஆலோசனை நடத்தினார். இந்தச் சந்திப்பில் சட்டமன்றக் கட்சித் தலைவர் தேர்வு மற்றும் ஆட்சி அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. நாளை (புதன்கிழமை) அவர் ஆளுநரைச் சந்திக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரம்பூர் தொகுதியிலேயே நீடிப்பு? விஜய் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளதால், அவர் எந்தத் தொகுதியைத் தக்கவைத்துக் கொள்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி, விஜய் பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ-வாகத் தொடர முடிவெடுத்துள்ளதாகவும், திருச்சி கிழக்கு தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆட்சி அமைக்க ஆதரவு யாருடையது? ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை இல்லாததால், தவெக யாருடைய உதவியை நாடும் என்பது பெரும் விவாதமாகியுள்ளது. காங்கிரஸ் கட்சி தவெக-விற்கு ஆதரவளிக்க வாய்ப்புள்ளதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன.

திமுக-வின் கருத்து: இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக மூத்த தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன், “காங்கிரஸ் கட்சிக்கு ஐந்து எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே உள்ளனர். அவர்களின் ஆதரவை மட்டும் வைத்துக்கொண்டு விஜய் ஆட்சி அமைக்க முடியாது. தவெக-விற்கு அதிமுக-வின் ஆதரவும் தேவைப்படும். ஒருவேளை அதிமுக ஆதரவு அளிக்காவிட்டால், மீண்டும் தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உருவாகலாம்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் ஏற்றுக்கொண்டார்.