“மண்டையில் சுர்ரென்று ஏறியது” – இந்தி வரவேற்பால் கொதித்த அமைச்சர் நாசர்!

Highlights:
[‘தனியார் கல்லூரி விழாவில் இந்தியில் வரவேற்பு அளித்ததற்கு அமைச்சர் நாசர் அதிருப்தி தெரிவித்தார்.’, ‘வரவேற்பு முறையை மாற்ற வேண்டும் என கல்லூரி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினார்.’, ‘பிற மொழிகளை விட தமிழ் மொழியில் அதிக எழுத்துக்கள் இருப்பதைச் சுட்டிக்காட்டி அதன் பெருமையைப் பேசினார்.’, ‘ஆவடியில் அரசு மாதிரிப் பள்ளி விடுதி மற்றும் புதிய ஆய்வகத்தைத் திறந்து வைத்தார்.’, ‘4,500 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகளை வழங்கினார்.’]

சென்னை ஆவடி அருகே நடைபெற்ற தனியார் கல்லூரி விழாவில், தனக்கு இந்தியில் வரவேற்பு அளிக்கப்பட்டதற்கு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் ‘நம்ம பள்ளி நம்ம ஊரு பள்ளி’ திட்டத்தின் கீழ், தண்டுரை அரசு மாதிரிப் பள்ளி மாணவர்களுக்கான விடுதி கட்டுமானப் பணிகளை அமைச்சர் நாசர் இன்று தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற ‘உலகம் உங்கள் கையில்’ என்ற நிகழ்ச்சியில் 4,500 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகளை அவர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் நாசர் பேசுகையில், “நிகழ்ச்சிக்கு வந்தவுடன் எனது மண்டையில் சுர்ரென்று ஏறிவிட்டது. என்னை வரவேற்ற என்.சி.சி மாணவர்கள் முழுவதும் இந்தியிலேயே பேசினார்கள். அவர்கள் பேசியது எனக்குப் புரியவில்லை. அந்த வரவேற்பு முறையை மாற்ற வேண்டும்” என ஆவேசமாகத் தெரிவித்தார்.

மேலும் தமிழ் மொழியின் சிறப்புகளைப் பட்டியலிட்ட அவர், “தெலுங்கு, இந்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளுக்கு மிகக் குறைவான எழுத்துக்களே உள்ளன. உலகப் பொதுமொழியான ஆங்கிலத்திற்கே வெறும் 26 எழுத்துகள்தான். ஆனால், தமிழுக்கு மட்டுமே 247 எழுத்துகள் உள்ளன. அத்தகைய செழுமையான மொழியைப் பேசும் நாம் அந்தத் திமிரோடு இருக்க வேண்டும்” என்று பேசினார். அமைச்சரின் இந்தப் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Topics: ##MinisterNasser ##HindiImposition ##TamilLanguagePride ##TamilNaduGovernment ##NasserSpeech

Scroll to Top