தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசுகையில், அ.தி.மு.க. தனது தேர்தல் வாக்குறுதிகளில் எதையுமே நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டினார்.

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக காரைக்குடிக்கு வருகை தந்த முதல்வர், ₹2,559 கோடி மதிப்பிலான அரசு திட்டங்களை தொடங்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக, இன்று காலை கானடிகாத்தானில் கட்டப்பட்டுள்ள வேளாண் கல்லூரியையும், அதைத்தொடர்ந்து கழனிவாசல் பகுதியில் அரசு சட்டக்கல்லூரியையும், அத்துடன் ₹32 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவையும் திறந்து வைத்தார்.

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களின் பெருமையை எடுத்துக்காட்டும் கீழடி அமைந்துள்ள சிவகங்கை மண், விடுதலை தியாகத்தின் எடுத்துக்காட்டுகளான வேலு நாச்சியார், குயிலி பிறந்த மண் என்று புகழாரம் சூட்டினார். தொடர்ந்து அவர், திராவிட மாடல் அரசு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி வருகிறது என்றும், அடுத்தும் திராவிட மாடல் ஆட்சிதான் அமையும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் தெரிவித்தார். தற்போது அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களை மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் தானே திறந்து வைப்பேன் என்றும் உறுதியளித்தார்.

முன்னாள் அ.தி.மு.க. அரசு கொடுத்த எந்தத் தேர்தல் வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்று தெரிவித்த முதல்வர், தி.மு.க. அரசு அளித்த வாக்குறுதிகளை மட்டுமல்லாமல், சொல்லாத பல வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளதாகவும் கூறினார். உறுதி அளிக்கப்பட்ட புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், ஆளுநர் எந்த ஆதாரமும் இல்லாத குற்றச்சாட்டுகளைக் கூறி வருவதாகவும், தி.மு.க. அரசின் திட்டங்களை மத்திய அரசே பாராட்டியுள்ளதால், ஆளுநர் எதையும் தெரிந்துகொண்டு பேச வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மத்திய அரசுக்கு மக்கள் நன்றாக இருப்பது பிடிக்காது என்றும், 50 நாட்கள் கூட ஊரக வேலைவாய்ப்பை மத்திய அரசு வழங்கவில்லை என்றும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார். முன்பு ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம் கிராம மக்களுக்கு மாத ஊதியமாக ₹10,000 கோடியில் இருந்து ₹15,000 கோடி வரை வழங்கப்பட்டதாகவும், மக்களின் துணையோடு மீண்டும் அத்திட்டத்தை கொண்டு வருவோம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், இன்னும் பல கனவுத் திட்டங்கள் உள்ளன என்றும், அவற்றை நிறைவேற்ற மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக்கொண்டார்.