2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. பல்வேறு கட்சித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் அளிக்கும் கருத்துகள் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆற்றிய உரை ஒன்று அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
சமீபத்திய நேர்காணல் ஒன்றில், ‘கமல்ஹாசன் பேசுவது புரிவதில்லை’ என்ற கேள்விக்கு அவர் பதிலளித்தார். அப்போது, “சில சமயம் கெட்ட வார்த்தைகளில் திட்டுவார்கள். அப்போது, ‘என்ன சொல்கிறீர்கள், எனக்குப் புரியவில்லை’ என்று சொல்வதுதான் சரியான பதில். ஏனெனில், ‘நீங்கள் இப்படித்தான் சொல்கிறீர்களா?’ என்று நாம் கேட்டு, அவர் ஆமாம் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது? அதாவது, புரிந்தாலும் புரியாதது போல் விட்டுவிடுவார்கள். ஒருவேளை புரிந்துகொண்டால் அவர்கள் பதில் சொல்ல வேண்டியிருக்குமே, அதனால்தான் புரியாதது போல் சொல்கிறார்கள். ஆனால், நான் உங்களுக்குப் புரியும் வரை சொல்லிக்கொண்டே இருப்பேன்,” என்று சுவாரசியமாகப் பதிலளித்தார்.
அரசியல் தலைவர்களுடன் பேசும்போது இதே பாணியில்தான் பேசுவீர்களா, உதாரணமாக கூட்டணிப் பேச்சுவார்த்தையின்போது எப்படிப் பேசுவீர்கள் என்ற கேள்விக்கு, “நான் எப்படிப் பேசுவேன் என்று நீங்கள் அவர்களிடம் தான் கேட்க வேண்டும். அந்த உண்மையை அவர்கள்தான் சொல்ல வேண்டும்,” என்றார். கேமராவுக்கு முன்பும் பின்னரும் வேறு வேறாகப் பேசுவீர்களா என்ற கேள்விக்கு, “ஆமாம், நான் ஒரு நடிகன்,” என்றார். இதை அரசியல் சார்ந்த பதிலாக எடுத்துக்கொள்ளலாமா என்ற கேள்விக்கு, “கண்டிப்பாக இது ஒரு அரசியல் சார்ந்த பதில் தான்,” என்று சிரித்தவாறே கூறினார்.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் குறித்து விவரிக்குமாறு கேட்கப்பட்டபோது, கமல்ஹாசன் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் வார்த்தைகளை மேற்கோள் காட்டினார். “அரசுகள் வீழும், எழும். நாடு நாளையை நோக்கி நகர்ந்துகொண்டே இருக்கும். அந்த நாளை நமதாக வேண்டும்,” என்பதே வாஜ்பாய் உரைத்த வார்த்தைகள் என்று அவர் தெரிவித்தார். இந்த வார்த்தைகளை ஆங்கிலத்திலும் தமிழிலும் கூறிய கமல்ஹாசன், இந்தியிலும் சொல்வீர்களா என்று கேட்டபோது, “அதை நான் டெல்லியில் சொல்லிக்கொள்கிறேன்,” என்று பதிலளித்தார்.
